அரசாங்கத்தின் திட்டமிடப்படாத செயற்பாடுகளே கொரோனா தொற்றின் மூன்றாம் அலைக்கு காரணமெனவும், குறிப்பாக சுகாதார தரப்பு முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகளை இராணுவத்திடம் ஒப்படைத்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
விசேட வைத்திய நிபுணர்கள், சுகாதார தரப்பினர் நாட்டை முடக்க வேண்டுமென ஏற்கனவே வலியுறுத்திய நிலையில், நாட்டில் தொற்றுப் பரவல் இல்லையென்ற மாயையை அரசாங்கம் உருவாக்கியிருந்ததாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே சட்டத்தை இறுக்கமாக்க வேண்டுமெனவும் நாட்டை முடக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு நான் நன்றி கூறுகின்றேன்.
பொது சுகாதார பரிசோதகர்கள் நாட்டை முடக்க வேண்டுமென குறிப்பிட்டார்கள், விசேட வைத்திய நிபுணர்கள் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். நாட்டை முடக்க வேண்டுமென வலியுறுத்தினார்கள்.
எனினும் அரசாங்கத்திற்கு சார்பான ஊடகங்கள் ஊடாக தொற்று குறைந்து வருவதாக அரசாங்கம் பிரசாரம் செய்தது. மக்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சுற்றித்திரிந்தனர். இதனாலேயே இந்த ஆபத்து ஏற்பட்டது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் சுகாதார தரப்பினரே முன்னிலையில் இருந்து செயற்பட வேண்டும். அனைத்து நாடுகளும் வைத்தியர்களை முன்களப் பணியாளர்களாகக் கொண்டு செயற்பட்டது.
எனினும் எமது நாட்டில் என்ன நடக்கின்றது. தொலைக்காட்சியை பார்க்கையில் எமது நாட்டில் இராணுவ ஆட்சி ஒன்று நடைபெறுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுவதாக ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
பொருளாதார நிபுணர்களால், பொறியியலாளர்களால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா? அரசாங்கத்தின் செயற்பாடுகளே இந்த அழிவிற்கு காரணம்.
இராணுவத்தில் உள்ள அப்பாவி உறுப்பினர்கள் இந்த தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இவை அனைத்திற்கும் அரசாங்கமே காரணம் என்றார்.

No comments:
Post a Comment